This Article is From Jul 09, 2018

தாய்லாந்து குகையில் சிக்கிய குழு: 5வது சிறுவன் மீட்பு!

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர்

ஹைலைட்ஸ்

  • முதல் 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்டனர்
  • குகைக்குள் இருக்கும் அனைவரையும் மீட்க இன்னும் 4 நாட்கள் ஆகலாம்
  • சிறுவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
CHIANG RAI, Thailand:

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், முதலாவதாக அவர்களில் 4 பேரை பத்தரமாக மீட்டுக் கொண்டு வந்தனர் மீட்புப் படையினர். தற்போதூ 5-வதாக ஒரு சிறுவனும் மீட்கப்பட்டுள்ளான்.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ஒரு கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். தாய்லாந்தில் ஜூலை மாதங்களில் அடை மழை பெய்யும். இந்த நேரத்தில் தம் லுவாங் குகைக்குள் செல்வது பாதுகாப்பனதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால், கால்பந்து குழுவினர் சரியாக இந்த நேரத்தில் சென்றது தான் அவர்கள் உள்ளேயே மாட்டிக் கொண்டதற்குக் காரணமாக இருந்துள்ளது. சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர்.

இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. சம்பவம் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்த உடன், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காகவே பயிற்சி பெரும் நபர்கள் சிறுவர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர். பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது.

இந்நிலையில் 9 நாட்கள் குகையில் இருந்த 12 சிறுவர்கள் மற்றும் 25 வயதாகும் அவர்களின் கோச் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், குகையிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மிகுந்த சவால் நிறைந்தது என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று 4 சிறுவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணி தொடங்கப்பட்டது. அவர்கள் நால்வரும் தற்போது பத்திரமாக உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குகையிலிருந்து 4 சிறுவர்களும் வெளியே வந்த உடன் அவர்களை அங்கு தயார் நிலையிலிருந்து மருத்துவக் குழு பரிசோதித்தது. பின்னர், ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் சியாங் ராய் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் தற்போது 5வதாக ஒரு சிறுவனையும் மீட்டுள்ளனர்.

5வதாக மீட்கப்பட்ட சிறுவன் குகையிலிருந்து வெளியே வந்த போது, மற்ற சிறுவர்கள் போல சாதரணமாக வரவில்லை. அவனது உடல் முழுவதும் பச்சைத் துணியில் சுத்தப்பட்டு, ஸ்டெர்ட்ச்சரில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். இது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆனால், மீட்புக் குழு அனைத்து சிறுவர்களும் மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவே கூறியுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட எந்த சிறுவர்களைப் பற்றிய தகவல்களும் வெளியே சொல்லப்படவில்லை. காரணம், மீட்கப்படாத மற்ற சிறுவர்களின் குடும்பங்கள் அவதிக்குளாகக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. மேலும், சிறவர்கள் அவர்களின் குடும்பத்தாரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்ல. குகைக்குள் 2 வாரங்கள் சிக்கியிருந்ததால், அவர்களுக்கு தொற்று நோய் ஏதாவது வந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகப்படுகின்றனர். இது மற்றவர்களுக்குப் பரவக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடாம்.

தொடர்ந்து குகைப் பகுதியில் அடைமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போதைக்கு குகைக்குள் குறைந்த அளவிலான நீர் மட்டுமே தேங்கியுள்ளது. எனவே, மீட்புப் பணியை இப்போதே முடித்தாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. 

மீட்புப் பணியின் போது தாய்லாந்து சீல் படையைச் சேர்ந்த ஒரு வீரர் பிராண வாயு கிடைக்காமல் இறந்து போனார். இதனால், அனைத்து மீட்புக் குழுவினரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். 


 

.