முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் பாஜகவில் இருந்து கடந்த வருடம் நீக்கப்பட்டார்
ஹைலைட்ஸ்
- அதுல் செங்காருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
- அந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் வழங்க உத்தரவு
New Delhi: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக செங்கருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது சகோதரர் அதுல் செங்காருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமியின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சத்தைச் சகோதரர்கள் இருவரும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்ப்பில் நீதிபதி தர்மேஷ் சர்மா மேலும் கூறும்போது, பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தந்தையை இழந்துள்ளார். அவரால் தற்போது அவரது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. அவரது வீட்டில் 4 சிறுவர்கள் உள்ளனர்.. அதில், 3 பேர் பெண் குழந்தைகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு சக்திவாய்ந்த நபருக்கு எதிராகப் போராடியதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிபதி பாராட்டினார்.
தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு எதிராகப் பொய்யான வழக்குகளைப் பதிவு செய்ததை நீதிபதி கடுமையாகக் கண்டித்தார். மேலும், குற்றப்பத்திரிகை பதிவு செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இல்லம் முன்பாக தற்கொலைக்கு முயன்றார். இதன்பின்னரே நாடே திரும்பிப் பார்க்கும் அளவில் இந்த வழக்கு முக்கிய வழக்காக மாறியது.
With input from IANS