This Article is From May 21, 2019

Exclusive: ஏவப்பட்ட 12 நொடிகளில் சொந்த ஹெலிகாப்ட்டரையே அழித்த இந்திய விமானப்படை ஏவுகணை!

பிப்ரவரி 27 ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த சுமார் 24 விமானங்கள், எல்லையைக் கடந்து இந்திய ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது

Exclusive: ஏவப்பட்ட 12 நொடிகளில் சொந்த ஹெலிகாப்ட்டரையே அழித்த இந்திய விமானப்படை ஏவுகணை!

இந்த விபத்தில் 6 விமானப் படை வீரர்கள் மற்றும் நிலத்தில் இருந்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

New Delhi:

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, இந்திய விமானப்படை ஏவிய ஏவுகணை ஒன்று, சொந்த நாட்டுப் போர் ஹெலிகாப்ட்டரான எம்.ஐ-17-ஐ சுட்டு வீழ்த்தியது. இந்த விபத்தில் 6 விமானப் படை வீரர்கள் மற்றும் நிலத்தில் இருந்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை செய்து வந்த அரசு தரப்பு, இன்னும் 20 நாட்களில் தனது விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர உள்ளது. 

இது குறித்து NDTV-க்கு, இந்திய விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்த தகவல்படி, “இஸ்ரேல் நாட்டு ஸ்பைடர் ஏவுகணை, கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, ஸ்ரீநகர் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது குறித்து எந்த வித சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால், இந்த விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டறியவே விமானப்படை இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது” என்று விளக்கின. 

NDTV-யிடம் இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட விமானப்படை தரப்பு, “ஏவுகணை விண்ணில் ஏவப்பட்ட 12 நொடிகளில் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்ட்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. தாங்கள் தாக்கப்படப் போகிறோம் என்பது குறித்து அவர்களுக்கு எந்த வித தகவலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியது.

பிப்ரவரி 27 ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த சுமார் 24 விமானங்கள், எல்லையைக் கடந்து இந்திய ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதை எதிர்கொள்ள 8 இந்திய விமானப் படை விமானங்கள், புறப்பட்டுள்ளன. 

இதையடுத்து காஷ்மீரில் இருக்கும் ஏவுதளங்கள் உஷார் படுத்தப்பட்டன. குறிப்பாக, பாகிஸ்தான் விமானங்கள் ஏதேனும் இந்தியாவுக்கு வருமானால் அதைச் சுட்டு வீழ்த்த தயாராக இருந்தன.

அப்போதுதான் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருக்கும் விமானப் படை ரேடார், குறைந்த உயரத்தில் பறக்கும் ஓர் விமானத்தை கண்டுபிடித்தது. அது யாருடையது என்று அறிய முடியாத வகையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துதான், ஹெலிகாப்ட்டர் மீது ஏவுகணை தொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் Friend or Foe (IFF) என்று சொல்லப்படும் அடையாளம் காணும் தொழில்நுட்ப முறை சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தாக்குதலுக்கு முன்னர், அது இந்திய விமானப் படை விமானம்தானா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் நிறைய சோதனைகள் இருக்கின்றன எனவும், அது சரிவர பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


 

.