This Article is From Jul 30, 2018

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம், ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு
Chennai:

முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம், ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதரர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது என்று கூறிய உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டது.

தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சென்னை, போட் கிளப்பில் இருக்கும் தனது வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இப்படி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்ததால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் கடந்த மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம், மாறன் சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. ஆனால், இதற்கு எதிராக தீர்ப்பளித்திருந்தது உயர் நீதிமன்றம்.

இந்நிலையில்தான் உச்ச நீதிமன்றம், ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வசதியை உங்கள் சகோதரரின் டிவி சேனலுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து நீங்கள் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளது.

.