This Article is From Apr 22, 2019

வாக்கு இயந்திரம் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ

வாக்கு இயந்திரம் உள்ள அறைகளில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வாக்கு இயந்திரம் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பெண் வட்டாட்சியர் ஒருவர் சென்ற விவகாரத்தில், அவர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, பெண் வட்டாட்சியருக்கு உதவியதாக இன்று காலை மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறும்போது, வாக்கு இயந்திரம் வைத்துள்ள அனைத்து மையங்களிலும் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம். இது தேர்தல் விதிகளில் இருக்கும் நடைமுறை தான்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் விதிகளை பின்பற்ற வேண்டும், தமிழக அரசு முக்கிய அறிவிப்புகளை தேர்தல் ஆணைய அனுமதிக்கு பின்னரே வெளியிட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர் மற்றும் கடலூரில் தலா 1 என 10 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

.