This Article is From Oct 25, 2019

Election Results: மகாராஷ்டிரா, பாஜக கைவசம்… அரியானாவில் இழுபறி: 10 Points

Assembly Election Results 2019: அரியானாவில் காங்கிரஸ், 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Election Results 2019: பாஜக, தேர்தல் பிரசாரத்தை தேசிய பிரச்னைகளை முன்வைத்தே சந்தித்தது.

New Delhi:

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அரியணையில் அமரப் போகிறது. 2014 ஆம் ஆண்டு, இந்தக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியை ஒப்பிடும்போது, தற்போது கிடைக்கப் போகும் வெற்றி சிறியதாகவே இருக்கும். அதே நேரத்தில் அரியானாவில், பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக-வுக்கு ஆட்சியமைக்கு அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த 10 Points:

1.பாஜக தலைவர் அமித்ஷா, அரியானா வெற்றி குறித்து, “பாஜக-வை தனிப் பெரும் கட்சியாக உருபெறச் செய்த அரியானா மக்களுக்கு நன்றி,” என்றார். பிரதமர் மோடி, “எங்களை ஆசிர்வதித்தமைக்கு அரியானா மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உத்வேகத்தோடு உழைப்போம். நம் வளர்ச்சி பிரசாரத்தை அரியானா மக்களிடம் எடுத்துச் சென்ற தொண்டர்களுக்கு நன்றி,” என்று ட்வீட்டினார்.

2.அரியானாவில் காங்கிரஸ், 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜட் சமூக தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவின் கட்சி, 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அவர்தான் தற்போது அரியானாவின் ‘கிங்-மேக்கராக' வலம் வருவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆட்சியமைக்க சவுத்தாலாவிடம் காங்கிரஸ் ஆதரவு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3.அரியானா தேர்தல் முடிவு குறித்து, அம்மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா, “துஷ்யந்த் சவுத்தாலா எங்களுடன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார். 

4.மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு 100 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவுக்கு 60 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேஜகூ கூட்டணி, சுமார் 150 இடங்களை கைப்பற்றலாம். மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 150-ஐ கைப்பற்றினால் சுலபமாக ஆட்சியமைத்துவிடலாம். ஆனால், பாஜக, தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கு என்று எதிர்பார்த்தது. அந்த எண்ணம் ஈடேறவில்லை. 

5.மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்து சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, “50:50 ஃபார்முலாவை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. பாஜக கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே நாங்கள் குறைவான இடங்களில் போட்டியிட்டோம். எப்போதும் அப்படி விட்டுக் கொடுக்க மாட்டோம்,” என்றுள்ளார்.

6.சிவசேனா, இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பொறுப்பு வேண்டும் என்று பாஜக-விடம் கேட்கும் என்று தகவல்கள் சொல்கின்றன. 

7.தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸை விட அதிக இடங்களில் வெற்றியடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தீர்க்கமான பிரசார யுக்தியே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

8.நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 17 மாநிலங்களில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் நடைபெறும் 51 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாஜக வசமும், 12 தொகுதிகள் காங்கிரசிடமும், மற்ற தொகுதிகள் மாநில கட்சிகளிடம் உள்ளன.

9.பாஜக, தேர்தல் பிரசாரத்தை தேசிய பிரச்னைகளை முன்வைத்தே சந்தித்தது. எதிர்கட்சிகள் விவசாயப் பிரச்னை, பொருளாதார மந்த நிலை உள்ளிட்டவையை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டன.

10.காங்கிரஸ், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து இன்னும் மீண்டெழவில்லை. ராகுல் காந்தி, 7 பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். அவரது தாயாரும், காங்கிரஸின் தலைவருமான சோனியா காந்தி, ஒரு பிரசாரக் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. 


 

.