This Article is From May 25, 2019

திராவிட கோட்டைக்குள் பாஜகவால் நுழைய முடியவில்லை: வைகோ

திராவிட கோட்டைக்குள் பாஜகவால் நுழைய முடியவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திராவிட கோட்டைக்குள் பாஜகவால் நுழைய முடியவில்லை: வைகோ

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கைகள் நிறைவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகாவின் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக நலன்களை திமுக காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். நியூட்ரினோ மேகதாது அணை ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இருக்கும்.

திராவிட கோட்டைக்குள் பாஜகவால் நுழைய முடியவில்லை, அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார்.

ஆளும் கட்சிகளின் அறைகூவலுக்கு எதிராக திமுக கூட்டணியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர். திமுக கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆளும் கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

.