This Article is From May 19, 2019

உ.பி.யில் வாக்காளர்கள் விரலில் வலுகட்டாயமாக நேற்றே மை வைக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தல் 2019: உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி எனும் கிராமத்தை சேர்ந்த மக்கள் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருடன் காவல்நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Lok Sabha Election: கிராமவாசிகளுக்கு பாஜகவினர் பணம் தந்ததாக புகார் எழுந்துள்ளது.

Chandauli:

உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு பாஜகவினர் வலுகட்டாயமாக விரலில் மை வைத்துவிட்டு பணம் தந்ததாக கிராமவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது.
பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்காக மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு வலுக்கட்டாயமாக மை வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, யாரிடமும் சொல்ல வேண்டாம், நீங்கள் வாக்களிக்க தேவையில்லை. நாங்களே கட்சிக்கு வாக்களித்து கொள்கிறோம் என்று பாஜகவினர் தெரிவித்ததாகவும், அக்கட்சியை சேர்ந்த 3 பேர் அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு ரூ.500 பணம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் மக்களுடன் சஞ்சய் செளகான் குரல் எழுப்பி வருகிறார். இவர் மாயவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஆவார். இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் சில கிராமவாசிகள் கூறும்போது, கைகளில் மை வைத்து பணம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் யாரும் வாக்களிக்க செல்ல முடியாது என்ற காரணத்திற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கும் ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.