This Article is From Jul 30, 2018

‘என் கோரிக்கை நிறைவேறாவிட்டால்…’- எதிர்கட்சியை மிரட்டும் ட்ரம்ப்

பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பாக தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்

‘என் கோரிக்கை நிறைவேறாவிட்டால்…’- எதிர்கட்சியை மிரட்டும் ட்ரம்ப்
Washington:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பாக தனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். 

ட்ரம்ப், அமெரிக்க அதிபராக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து அகதிகள் விஷயம் தொடர்பாகவும் குடியுரிமை தொடர்பாகவும் பல திடுக்கிடும் முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பல முஸ்லீம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு, சட்டத்துக்கு புறம்பாக நாட்டில் குடியேறுபவர்களை சிறையில் அடைப்பது, மெக்சிக்கோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்பவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், ‘ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் பார்டர் செக்யூடி, சுவர் கட்டுவது போன்ற கோரிக்கைகளுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுவேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க செனட் சபை மற்றும் காங்கிரஸ் சபையில், ட்ரம்ப் எடுத்துள்ள முடிவுகளுக்கு ஆதரவு வந்தால் தான் அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியும். அமெரிக்க காங்கிரஸ் சபையில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், கட்சிக்குள்ளேயே ட்ரம்பின் முடிவுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. செனட் சபையைப் பொறுத்த வரையில், குடியரசுக் கட்சிக்கு சிறிய அளவிலான பெரும்பான்மையே இருக்கிறது. இதனால், தான் ட்ரம்ப் ட்வீட்டில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களை ஆதரவு தெரிவிக்கக் கோரி மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். 

2017 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப், பலமுறை ‘அரசு முடக்கம்’ பற்றி பேசியும் மிரட்டியும் உள்ளார். முக்கியமாக மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டுவதற்காகவே இந்த யுக்தியை அவர் கையிலெடுத்தார். 

ஜனவரி மாதம் சபையில் நடந்த வாக்குவாதம் காரணமாக 3 நாட்கள் அரசு முடக்கம் நடந்தது. பிப்ரவரி மாதமும் சில மணி நேரம் அரசு முடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதைப் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், மக்கள் மத்தியில் ட்ரம்பிற்கு கெட்ட பெயர் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

.