This Article is From Nov 18, 2019

அதிமுக கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் கால் இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி!

கொடி கம்பம் விழுந்து லாரி மோதி கால்களை இழந்த ராஜேஸ்வரியையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிமுக கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் கால் இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி!

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

Coimbatore:

அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்தில் கால் இழந்த பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். 

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அனுராதா ராஜேஸ்வரி, பட்டப்படிப்பை முடித்த இவர், தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் கடந்த 11ம் தேதி, தனது அலுவலகத்திற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் கீழே சாய்ந்து விழுந்தது. 

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ராஜேஸ்வரியின் கால்கள் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது இடது கால் அகற்றப்பட்டது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவையில் கொடி கம்பம் விழுந்து லாரி மோதி கால்களை இழந்த ராஜேஸ்வரியையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவருக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அனுராதாவிற்கு செயற்கை கால் பொறுத்துவதற்கான முழு செலவையும் திமுக ஏற்கும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த செப்.12ஆம் தேதி பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். 

.