This Article is From May 14, 2019

''பாஜக கூட்டணியில் ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஸ்டாலின் உள்ளார்'' : பிரேமலதா

பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

''பாஜக கூட்டணியில் ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஸ்டாலின் உள்ளார்'' : பிரேமலதா

கூட்டணி பேச்சு விவகாரத்தில் ஸ்டாலினை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பாஜவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில், பாஜக கூட்டணியில் ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஸ்டாலின் இருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேம லதா விமர்சித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முடிவு வெளியாகும் நாளான மே 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்டாலினை, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஆகியோர் சந்தித்து பேசினர். 

இதுதொடர்பாக பேட்டியளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பாஜகவுடன் ஸ்டாலின் கூட்டணி பேசி வருவதாக கூறியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த ஸ்டாலின் தமிழிசையை கண்டித்து 2 பக்க அறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் பாஜகவுடன் கூட்டணி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று கூறியிருந்த ஸ்டாலின், நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பினார். 

இந்த விவகாரம் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்து விட்டதாக கருதுகிறேன். வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போன்ற எதையாவது செய்து பாஜக கூட்டணியில் இருந்து ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஸ்டாலின் உள்ளார். உறுதியாக அதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. 

பெரும்பான்மை பலத்துடன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்பதால் எவருடைய ஆதரவும் எங்களுக்கு தேவையாக இருக்காது. அனைத்து கேள்விகளுக்கும் மே 23-ம்தேதி விடை கிடைத்து விடும். 

இவ்வாறு பிரேமலதா கூறினார்.  

.