This Article is From Aug 13, 2019

'காஷ்மீரில் கைதான அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும்' : ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்கு அக்டோபரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

'காஷ்மீரில் கைதான அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும்' : ஸ்டாலின்!

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் சுமார் 70 ஆண்டுகளாக நீடித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்துள்ளது. இதேபோன்று காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாநிலம் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னெச்சரிக்கையாக அவர்களை மத்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பெரும் பிரச்னைகளுக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகையும் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. 

முன்னதாக பிரச்னை ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரை மத்திய பாதுகாப்பு படையினர் கைது செய்திருந்தனர். அவர்களது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாத செயலாகும். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். அவர்களை தண்டிக்கும் விதத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே, அக்டோபர் மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 12-ம்தேதி தொடங்கும் மாநாடு 14-ம்தேதி வரைக்கும் ஸ்ரீநகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தது 8 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.