This Article is From Jun 15, 2019

''குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்'' : ஸ்டாலின்

சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

''குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்'' : ஸ்டாலின்

குடிநீர் பிரச்னையை தீர்க்கும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 

நாள்தோறும் குடிநீர் தேடி அலைந்து அல்லல்பட்டுத் திண்டாடும் மக்கள் பற்றித் துளியும் கவலைப்படாமல்- கட்சிக் கூட்டங்களையும் நடத்திக் கொண்டும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டும்- மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று அலட்சியமாகவும் ஆணவத்துடனும் இருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னைக்கு எவ்வளவு குடிநீர் தேவை என்பதைக் கூடத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் “தினமும் 7000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்து கொண்டு வருகிறோம்” என்று இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவரே பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறிக் கொட்டி,பத்திரிக்கையாளர் நகைப்புக்குப் பாத்திரமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. 

சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் ஒரு நாளைக்கு சென்னை மக்களுக்கு 825 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய சூழலில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் திரு வேலுமணி “ஜூன் பதினைந்தாம் தேதி வரைதான் 500 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய முடியும்” என்று கூறி விட்டு, பிறகு “நவம்பர் வரைகூட ஓரளவு சப்ளை செய்து விட முடியும்” என்று கூறினார்.

அப்படியிருக்கும் போது குடியிருப்பு வாசிகள் “ஆன்லைனில் புக்கிங்” செய்யும் டேங்கர் லாரி குடிநீருக்காக 15 முதல் 18 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏன் வந்துள்ளது? தெருத்தெருவாக மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு சைக்கிளிலும், ரிக்‌ஷாக்களிலும் தொலை தூரம் சென்று ஒரு குடம் தண்ணீர் சேகரிக்கத் தள்ளப்பட்டுள்ளது ஏன்? மெட்ரோ வாட்டர் குழாய்களில் வரும் குடிநீரும் பல இடங்களில் துர் நாற்றம் வீசுவது ஏன்? தண்ணீர் இல்லாமல் பல உணவகங்கள் மூடப்படுவது ஏன்? தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் ஐ டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை.

சென்னைக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெறுவதற்குக் கூட ஆந்திர மாநில முதல்வரைச் சந்திக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. மத்திய அமைச்சர்களைச் சந்தித்து “எங்கள் கட்சிப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள்” “எங்கள் மீது எந்த ஊழல் நடவடிக்கையும் எடுத்து விடாதீர்கள்” என்று மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்டுக் கெஞ்சுவதை மட்டுமே உள்ளாட்சித்துறை அமைச்சர் இந்த மூன்று வருடங்களில் செய்து கொண்டிருக்கிறார். 

சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்திலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் “டெண்டர்களில்” கமிஷன் வசூல் செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு துளியை உள்ளாட்சித் துறை அமைச்சர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் காட்டியிருந்தால்- சென்னைக்கான அந்த இரு திட்டங்களை நான்குவருடத்தில் நிறைவேற்றியிருந்தால், இன்று சென்னை மக்கள் குடிநீர்ப் பஞ்சத்தில் துடிக்க வேண்டிய நிலை- துயரப்பட வேண்டிய நிலை வந்திருக்காது.

ஆகவே சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சித்துறை அமைச்சரின் படு தோல்விதான், இன்று சென்னை மக்கள் மட்டுமின்றி - தமிழ்நாடு மக்களும் குடிநீருக்கு அலையும் கொடுமைக்கு முழுக்காரணம்.

ஆகவே, இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

.