This Article is From Feb 22, 2020

'தேசிய அளவில் என்.ஆர்.சி. நடத்தப்படாது' - மோடி உறுதி அளித்ததாக உத்தவ் தாக்கரே தகவல்!

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார்.

'தேசிய அளவில் என்.ஆர்.சி. நடத்தப்படாது' - மோடி உறுதி அளித்ததாக உத்தவ் தாக்கரே தகவல்!

மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகப் பேசியதாகவும், இந்த சட்டம் தொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதேபோன்று குடியுரிமையை நிரூபிக்க வலியுறுத்தும் என்.ஆர்.சி.யை தேசிய அளவில் நடத்த மாட்டோம் எனப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். 

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார்.

கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகளுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி செய்துவரும் நிலையில் மோடியுடனான உத்தவின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக என்.ஆர்.சி., என்.பி.ஆர். தொடர்பாக சிவசேனாவும், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. 

மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். தற்போது இந்த 3 கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. 

குறிப்பாக என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றில் 3 கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

என்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே சில நாட்களுக்கு முன்பாக கூறியிருந்தார். 

'குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவை வேறு மாதிரியானவை. என்.பி.ஆரும் மாறுபட்டது. குடியுரிமை சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் யாரும் அதனால் கவலைப்பட வேண்டாம்.

இப்போதைக்கு என்.ஆர்.சி. இல்லை. அதனை தற்போது நிறைவேற்ற மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது' என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

கூட்டணி ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் கூறுகையில், குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி., என்.பி.ஆ. குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவோம் என்றார். 

.