This Article is From Apr 01, 2020

தமிழகத்தில் சமூகப் பரவலைத் தொடங்கியதா கொரோனா? எச்சரிக்கும் அன்புமணி

டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் சமூகப் பரவலைத் தொடங்கியதா கொரோனா? எச்சரிக்கும் அன்புமணி

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் சமூகப் பரவலைத் தொடங்கியதா கொரோனா?
  • நேற்று ஒரு நாளில் 24 நாட்களின் எண்ணிக்கைக்கு இணையாக 57 பேர் பாதிப்பு
  • அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

"தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதும், பாதிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு ஒரே ஆதாரத்திலிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியும் தமிழ்நாட்டு மக்களைக் கொடிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இது தொடர்பாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 255 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐக் கடக்க 54 நாட்கள் ஆயின. ஆனால், கடந்த இரு நாட்களில் மட்டும் 558 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

மற்றொரு பக்கம் தமிழகத்தின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் முதல் தொற்று ஏற்பட்ட மார்ச் 7-ம் தேதி முதல் நேற்று வரையிலான 24 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 மட்டும் தான். ஆனால், நேற்று ஒரு நாளில் 24 நாட்களின் எண்ணிக்கைக்கு இணையாக 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் எத்தகைய ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை இது விளக்கும்.

தமிழ்நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 50 பேர் மார்ச் மாதத் தொடக்கத்தில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இதுவரை 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குதான் கொரோனா வைரஸ் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 616 பேர் இன்று வரை அடையாளம் காணப்படவில்லை. இதுதான் தமிழகத்தில் சமூகப் பரவலைத் தொடங்கி வைத்துவிடுமோ அல்லது தொடங்கி வைத்திருக்குமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்பு நிகழ்ந்தது என்பதால், இப்போதே காலம் கடந்து விட்டதாகத்தான் தோன்றுகிறது. எனவே, டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வது அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

தமிழ்நாட்டு மக்களும் கடந்து சென்ற நாட்களை விட இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களையும் அறியாமல் பொதுவெளியில் நடமாடக்கூடும் என்பதால், வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான் பொதுநலனுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ஆகவே, டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்து தரப்பினரும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதுடன், தங்களின் சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்த வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 

.