This Article is From Feb 29, 2020

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது காங்கிரஸ்!!

நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் டெல்லி அரசும், மத்திய அரசும் மவுனப் பார்வையாளர்களாக இருந்தனர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது காங்கிரஸ்!!

டெல்லி வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-யை எட்டியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கலவர பகுதிகளை ஆய்வு செய்ய சோனியா காந்தி குழு அமைத்துள்ளார்
  • கலவரம் தொடர்பாக விரைந்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது
  • முன்னதாக குடியரசு தலைவரை சந்தித்து புகார் மனுவை காங்கிரஸ் அளித்தது
New Delhi:

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 பேர் கொண்ட குழு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கலவர பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும்.

சோனியாவால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் காங்கிரசின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லி மாநில பொறுப்பாளர் சக்திசிங் கோஹில், அரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, முன்னாள் எம்.பி. தாரிக் அன்வர் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி பகுதிகளைச் சோனியா காந்தி அமைத்துள்ள குழு ஆய்வு செய்யும். பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டு அது அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து காங்கிரஸ் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது - 

அரசியலமைப்பு சட்டத்தின்படி ராஜ தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு உங்களுக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது. நீங்கள் உத்தரவிட்டால் அதனை அரசு இணங்கித்தான் செல்ல வேண்டும். 

டெல்லியில் குடிமக்களுடைய வாழ்வு, சுதந்திரம், சொத்துக்களைப் பாதுகாக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய உள்துறை அமைச்சரைப் பொறுப்பு நீக்கம் செய்ய வேண்டும் என்று மீண்டும் உங்களை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 'குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜ தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்' என்றார்.  

சோனியா காந்தி அளித்த பேட்டியில்,'மத்திய அரசும், புதிதாக ஆட்சிக்கு வந்த டெல்லி ஆம் ஆத்மி அரசும், நடந்த கலவரத்தை வாய்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தனர்' என்று குற்றம் சாட்டினார். 

நடந்த வன்முறைக்குப் பொறுப்பு ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த ஞாயிறன்று தொடங்கிய குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த மோதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 

.