This Article is From Feb 28, 2020

டெல்லியில் நிலைமை சீராகி வருகிறது, வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு

அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,டெல்லி காவல்துறை, இரு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகச் சமாதான கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நிலைமை சீராகி வருகிறது, வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு

Delhi violence: வடகிழக்கு பகுதிகளில் சமாதானக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. (AFP)

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் நிலைமை சீராகி வருகிறது.
  • இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சமாதானக் கூட்டங்களை போலீசார் நடத்தி வருகின்றனர்.
New Delhi:

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறையில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியின் தற்போதைய நிலைமை குறித்துப் பரவலாக ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் தற்போது நிலைமை முன்னேற்றமடைந்து வருகிறது. வடகிழக்கு பகுதிகளில் மக்கள் கூட்டமாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடையிலிருந்து, இன்று 10 மணி நேரம் மட்டும் விலக்கு அளிக்கப்படும், காலை 4 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8மண வரை மட்டும் இந்த விலக்கு இருக்கும். கடந்த 36 மணி நேரத்தில் பெரியளவில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் அடுத்தடுத்து வளர்ந்து, பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் வன்முறையாளர்களால் வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள் தீ வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. 

மக்கள் வதந்திகளை நம்பக்கூடாது, இனவாத பதட்டத்தைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள குழுக்களின் தீய வடிவமைப்புகளுக்கு இரையாக வேண்டாம்" என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. "டெல்லியில் உள்ள 203 காவல் நிலையங்களில் 12 காவல் நிலையங்களோ அல்லது டெல்லியில் சுமார் 4.2 சதவீதம் மட்டுமே இந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. 

கிழக்கு டெல்லி மாநகராட்சியானதுக் குப்பைகள் நிறைந்த தெருக்களைச் சுத்தம் செய்து, "கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்" சேதமடைந்த பொதுச் சொத்துக்களைச் சரிசெய்கிறது என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டெல்லி காவல்துறை, இரு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகச் சமாதான கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நிலைமை இயல்பாகும் வரை இதுபோன்ற அமைதிக் குழுக் கூட்டங்கள் தொடரும் என்றும் இதுவரை 330 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த சமாதான கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும் கலந்துகொண்டனர். 

இதுவரை 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வழக்குகள் "சரியான நேரத்தில்" பதிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், விசாரணைக்காக சுமார் 514 பேர் சிறையாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை மேம்படும் போது, மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”கடும் குற்றங்கள்” குறித்து ஆராய இரண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை உருவாக்கியுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்.24ம் தேதி முதல் சுமார் 7000 மத்திய துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கூடுதல் பணியில் டெல்லியின் மூத்த காவல்துறை அதிகாரிகள் 112 பேரும், 200 பெண் காவல்துறை அதிகாரிகளும் பணியில் உள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அசம்பாவிதங்கள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க 22829334 மற்றும் 22829335 ஆகிய ஹெல்ப் லைன் எண்களை டெல்லி காவல்துறை அமைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த வன்முறையில் இரண்டு பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 70 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.