This Article is From Aug 11, 2019

ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்! பொதுமக்கள் வீட்டிலே இருக்கும்படி வலியுறுத்தல்!

நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினரின் வாகனங்களில் சென்றவாறு ஒலிபெருக்கிகளில் பொதுமக்கள் வீடுகளை வீட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும், கடைக்காரர்களையும் கடைகளை மூடும் படி அறிவுறுத்தினர்.

ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழலே நிலவுகிறது என அரசு தகவல் தெரிவித்துள்ளது.

New Delhi/Srinagar:

ஸ்ரீநகரில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நகரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்தே, இன்று மீண்டும் கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டதாக தெரிகிறது. 

நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் வாகனங்களில் சென்றவாறு ஒலிபெருக்கிகளில் பொதுமக்கள் வீடுகளை வீட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும், கடைக்காரர்களையும் கடைகளை மூடும் படி அறிவுறுத்தினர். 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் கூறும்போது, ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றினைந்து தவறான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஆனால், 10,000 மக்கள் ஒன்றுகூடி போராட்டம் செய்ததாக  ஊடகங்கள் தெரிவிப்பது தவறான தகவல்,  

ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழலே நிலவுகிறது. அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழந்ததாக மாநிலத்தில் எந்த பகுதியில் இருந்தும் தகவல் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். 

தலைமை செயலாளரும், மூத்த போலீஸ் அதிகாரியும் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக பரவும் தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். பக்ரித் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளும் பரபரப்பாகவே நேற்றைய தினம் செயல்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, தாக்கல் செய்தார். தொடர்ந்து, இந்த மசோதா மீது விவாதமும் நடந்து இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டடது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார். 

.