This Article is From Jul 23, 2019

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி! கர்நாடகத்தில் காங். - ம.ஜ.த. கூட்டணி ஆட்சி கவிழ்கிறது!!

குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. 

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி! கர்நாடகத்தில் காங். - ம.ஜ.த. கூட்டணி ஆட்சி கவிழ்கிறது!!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி அரசு தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. 

கர்நாடகாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அரசியல் குழப்பம், பெரும்பான்மை குறித்த பிரச்னைகள் வெடித்து வந்த நிலையில் 16 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. 

ராஜினாமா கடிதம் கொடுத்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர். இருப்பினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஆளுங்கட்சிக்கு போதிய ஆதரவு காணப்படாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. 

இதற்கிடையே எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டதால் அவர்கள் உச்ச நீதிமன்றத்ற்கு சென்றனர். அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் கடந்த 12-ம்தேதி கர்நாடக சட்டசபை கூடியது. அப்போது முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ம்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இருப்பினும் வாக்கெடுப்பு நடைபெறுவது இழுத்துக் கொண்டே சென்று ஒரு கட்டத்தில் அன்றைக்கும் வாக்கெடுப்பு நடக்கவில்லை. இதனால் கடுப்படைந்த பாஜக தலைவர் எடியூரப்பா சட்டசபைக்குள் படுத்து உறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதற்கிடையே எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இதைத் தொடர்ந்து இன்று வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு தொடங்கியது. முன்னதாக பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. 
 

இதன்பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றபோது குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

.