This Article is From May 26, 2020

''சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தார்'' - கொரோனா தடுப்பு விஷயத்தில் மோடிக்கு RSS பாராட்டு

கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார். கொரோனா பாதிப்பின்போது, பல்வேறு மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினார். 

''சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தார்'' - கொரோனா தடுப்பு விஷயத்தில் மோடிக்கு RSS பாராட்டு

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பாஜக வரும் 30-ம்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது.

ஹைலைட்ஸ்

  • சரியான நேரத்தில் மோடி நடவடிக்கை எடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். பாராட்டியுள்ளது
  • அமெரிக்கா, இத்தாலியுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு குறைவு
  • மே 30ம் தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது மத்திய பாஜக அரசு
New Delhi:

கொரோனா தடுப்பு விஷயத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாக அவரை  ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாராட்டியுள்ளது. மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக அந்த  அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

மார்ச் மாத ஆரம்பத்தில்  மத்திய அரசு விமான நிலையங்களில்  வெப்பநிலைமானி மூலம் பரிசோதனைகளை நடத்தியது. அப்போதே, கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்படத் தொடங்கின. 

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சரியான நேரத்தில்,  சரியான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக தொடர்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். கடந்தசில  ஆண்டுகளாகவே அவர் இதனை கடைபிடித்து வருகிறார். 

கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார். கொரோனா பாதிப்பின்போது, பல்வேறு மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினார். 

பொதுவாக நாம் போலீசாரையும், அரசு நிர்வாகத்தையும் குற்றம், குறை சொல்லி வருவோம். ஆனால் இந்த இரு தரப்பினர்தான்  கொரோனா பாதிப்பை முன்னணியில் நின்று எதிர்கொண்டனர். 

கொரோனா தடுப்பு விஷயத்தில்  சமூகத்தையும் நாம் பாராட்ட வேண்டும். ஏனென்றால், பிரதமர் மோடியின் ஒவ்வொரு கோரிக்கையையும் மக்கள் ஏற்று நடந்தனர். சமூகத்தின் பல்வேறு தரப்பினர் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், மாஸ்க்குகள், சானிடைசர், வென்டிலேட்டர்  உள்ளிட்டவற்றை அரசுக்கு அளித்தனர். 

இத்தாலி,  அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உயிரிழப்பு மிகக்குறைவாக உள்ளது. நமக்கு ஒவ்வொரு  உயிரும் மிக முக்கியமானது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்தியில்  இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பாஜக வரும் 30-ம்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பிடம் இருந்து பாராட்டு வீடியோ  வெளியாகி இருக்கிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.