This Article is From May 12, 2020

கொரோனா பாதிப்பை சரி செய்ய ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்! பிரதமர் மோடி அறிவிப்பு

நாள்தோறும் இந்தியாவில் 2 லட்சம் என் 95 மாஸ்க்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா விவகாரத்தில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. உலகின் மகிழ்ச்சிக்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கும் இந்தியா தொடர்ந்து பாடுபடும்.

கொரோனா பாதிப்பை சரி செய்ய ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்! பிரதமர் மோடி அறிவிப்பு

18-ம்தேதிக்குள் 4-வது பொது முடக்கம் தொடர்பான புதிய அறிவிப்புகள் வரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ரூ. 20 லட்சம் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவிக்கவுள்ளார் பிரதமர் மோடி
  • கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
  • பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தகவல் அளித்துள்ளார்
New Delhi:

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள், பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது-

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவிக்கவுள்ளேன். 'ஆத்மனிர்பார் பாரத் அபியான்' என்ற இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்படும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். 

இந்தியாவின் வளர்ச்சி என்பது பொருளாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், மக்கள் சக்தி, உற்பத்தி தேவை, தொழில்நுட்பம் ஆகிய 5 அம்சங்களை அடிப்படையாக கொண்டது. 

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உள்நாட்டு தொழில்துறைதான் நமக்கு பெருமளவில் உதவியது. ஏழை எளிய மக்கள் கொரோனா பாதிப்பை துணிச்சலாக எதிர்கொண்டு வருகின்றனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையாக சேதம் செய்து விட்டது. இதுபோன்ற பாதிப்பை நாம் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். உயிரைக்காக்க ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. 

இருந்தாலும் கொரோனா வைரஸ் முன்பு நான் தோல்வியடையவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 42 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.75 லட்சம்பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏராளமானோர் தங்களுக்கு பிரியமானவர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 


கொரோனா பிரச்னை ஏற்பட்டபோது நம்மிடம் ஒரு தனிநபர் பாதுகாப்பு கவசம் கூட கிடையாது. சில என் 95 மாஸ்க்குகள் மட்டுமே இருந்தன. இன்றைக்கு 2 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் வைத்திருக்கிறோம். 

நாள்தோறும் இந்தியாவில் 2 லட்சம் என் 95 மாஸ்க்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா விவகாரத்தில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறது. உலகின் மகிழ்ச்சிக்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கும் இந்தியா தொடர்ந்து பாடுபடும். 

இவ்வாறு மோடி பேசினார். 

முன்னதாக நேற்று நாட்டில் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி 6 மணி நேர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து இன்று நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். 
 

.