This Article is From Mar 26, 2020

நாங்கள் உருவாக்கவுமில்லை, பரப்பவுமில்லை: ‘கொரோனா சர்ச்சை’ குறித்து வாய்திறந்த சீனா!

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை, 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

நாங்கள் உருவாக்கவுமில்லை, பரப்பவுமில்லை: ‘கொரோனா சர்ச்சை’ குறித்து வாய்திறந்த சீனா!

உஹானில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது, மொத்த நகரத்துக்கும் ஊரடங்கு உத்தர பிறப்பிக்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
  • இத்தாலிதான் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
New Delhi:

கொரோனா வைரஸ், பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில், ‘அதை நாங்கள் உருவாக்கமில்லை, பரப்பவுமில்லை' என்று விளக்கம் கொடுத்துள்ளது சீனா. மேலும், கொரோனா வைரஸுக்கு ‘சீன வைரஸ்', ‘உஹான் வைரஸ்' என்று பெயர் வைத்து அழைப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ராங், “கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா எப்படி நடந்து கொண்டது என்பதைத்தான் சர்வதேச சமூகம் பார்க்கவே வேண்டுமே தவிர, சீனாவை குறை கூறுவது சரியல்ல,” என்றுள்ளார். 

மேலும் அவர், கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நல்ல ஒத்துழைப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராங் தெரிவிக்கையில், “சீனாவுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியது இந்தியா. இந்திய மக்கள், சீனாவுக்குப் பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தார்கள். அதற்காக நாங்கள் நன்றியுடன் உள்ளோம்,” என நெகிழ்ந்துள்ளார். 

கொரோனா வைரஸை, ‘சீன வைரஸ்', ‘உஹான் வைரஸ்' என்று முத்திரைக் குத்துபவர்களுக்கு ராங், “எங்கள் நாட்டைப் பலர் குறிப்பிட்டு இந்த விவகாரத்தில் பேசுகின்றனர். ஆனால், மொத்த மனித சமூகத்திற்கும் சீன மக்கள் செய்துள்ள தியாகத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை,” என விளக்கமளிக்கிறார். 

சீனாவின் உஹான் நகரத்தில்தான், கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவத் தொடங்கியது என்றாலும், அங்குதான் அந்த வைரஸ் உருவாகியது என்று ஸ்திரமாக சொல்ல எந்த ஆதாரங்களும் இல்லை என்கிறார் ஜி ராங். 

“கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை அறிவியல்பூர்வமாக அணுகி கண்டறிய வேண்டும். சீனா அந்த வைரஸை உருவாக்கவும் இல்லை, பரப்பவும் இல்லை. எனவே அதை ‘சீன வைரஸ்' என்று சொல்வது முற்றிலும் தவறு,” என்கிறார் ராங். 

இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கொரோனா வைரஸ் பற்றி பேசும்போது ‘உஹான் வைரஸ்' எனக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு சீனா கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. 

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் இந்தியாவில், சீனப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு, ஒரு வைரஸை எந்த நாட்டுடனோ அல்லது பகுதியோடோ ஓப்பிட்டுக் குறிப்பிடக் கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா வைரஸை சீனா அணுகிய விதம் குறித்துப் பேசிய ஜி ராங், “கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவுடன் அது குறித்து வெளிப்படையான, முழுமையான மற்றும் கறாரான நடவடிக்கைகளை எடுத்தது சீனா. அது குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சமூகங்களுக்கும் நாங்கள் தொடர்ந்து தகவல்களை அளித்து வந்தோம். 

உஹானில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது, மொத்த நகரத்துக்கும் ஊரடங்கு உத்தர பிறப்பிக்கப்பட்டது. இதனால் வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டது,” என்று விளக்கினார். 

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை, 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்திய அரசுத் தரப்பு முன்னதாக, சீனாவுக்கு 15 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது. 

தற்போது உலகத்தின் பல்வேறு இடங்களுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் சீனா, சமீபத்தில் இந்தியா உட்பட பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீடியோ கான்ஃபரென்சிங் மூலம், கொரோனா பரவலை எப்படி சமாளிப்பது என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது. 

“இந்திய மக்கள் இந்த வைரஸுக்கு எதிரான போரில் சீக்கிரமே வென்று விடுவார்கள் என்று நம்புகிறோம். மற்ற நாடுகளுடன் இணைந்து சீனா, கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடும். ஜி20 மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். இதன் மூலம் உலகில் உள்ள மனித சமூகத்தின் நலம் மற்றும் ஆரோக்கியத்தை உயர்த்தப் பாடுபடுவோம்,” என தெளிவுபடுத்தியுள்ளார் ராங்.


 

.