This Article is From Jun 06, 2020

நாடு முழுவதும் 2.35 லட்சம் பேருக்கு கொரோனா! உலக அளவில் 6வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!

நாடு முழுவதும் 1.12 லட்சம் பேர் குணமடைந்திருந்தாலும், தற்போது 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளொன்றுக்கு 8,000ஐ கடந்து வருகின்றது.

நாடு முழுவதும் 2.35 லட்சம் பேருக்கு கொரோனா! உலக அளவில் 6வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!

இந்தியாவில் நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

New Delhi:

நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.35 லட்சத்தினை கடந்துள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,600ஐ கடந்துள்ளது என மாநில அரசுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக கடந்த  வாரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவைவிட அதிக பாதிப்பினை கொண்ட நாடாக மாறியது. பின்னர் உலக நாடுகள் வரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 1 முதல் புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில் சேவையை மத்திய அரசு அனுமதித்ததையடுத்து சில மாநிலங்களில் தொற்று பரவல் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்தது.

நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 2,26,770 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 6,348 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. நேற்று மாலை நிலவரத்தை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. அதன்படி நாடு முழுவதும் தொற்றால் 2,35,769 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இத்தாலியில் 2,34,531 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்தியாவில் 6,641 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா உயிரிழப்புகள் அடிப்படையில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது இடத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தது.

நாடு முழுவதும் 1.12 லட்சம் பேர் குணமடைந்திருந்தாலும், தற்போது 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளொன்றுக்கு 8,000ஐ கடந்து வருகின்றது.

வர்த்தக தலைநகரை கொண்ட மாநிலமான மகாராஷ்டிரா, தேசிய தலைநகர் டெல்லி, தென்னிந்தியாவின் முக்கிய மாநிலமான தமிழ்நாடு, வட மாநிலமான குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தினை கடந்துள்ளது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பொன்ற மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தினை நெருங்கிகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு முழு முடக்க நடவடிக்கையில் சில தளர்வுகளை அனுமதித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி உத்தரப்பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 496 பேர் ஒரே நாளில் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 257 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,436 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,229 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 2,849 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த அளவில் கொரோனா பாதிப்பில் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த பாதிப்பு 27 ஆயிரத்து 256-ல் இருந்து 28 ஆயிரத்து 694 ஆக உயர்ந்திருக்கிறது.

குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,199 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,190 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 427 பேர் தொற்றால் புதியதாக பதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த எண்ணிக்கையானது 7,303 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் 111 பேருக்கு நேற்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கையானது 1,699 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 1.77 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.