This Article is From Dec 20, 2019

சர்ச்சையான ரஜினி ட்வீட்; ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? கொதித்தெழுந்த சீமான்!

குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்..

சர்ச்சையான ரஜினி ட்வீட்; ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? கொதித்தெழுந்த சீமான்!

தற்போதைய வன்முறைகள், மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ரஜினிகாந்த்

எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறையும், கலவரமும் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் இந்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டு சட்டம் அமலுக்கும் வந்தது. 

இதனிடையே, குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் எதிர்கட்சியினர், கல்லூரி மாணவர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாரிடையே வன்முறை ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்த கருத்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில் அவர் கூறியதாவது, எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறையும், கலவரமும் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பையும் நாட்டு நலனையும் மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். தற்போதைய வன்முறைகள், மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை செய்தது யார்? 

குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்.. அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது என்றும் ரஜினியின் பதிவு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என்று அவர் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடியுள்ளார்.

இந்நிலையில், ட்விட்டரில் ரஜினிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். #IStandWithRajinikanth, #ShameOnYouSanghiRajini ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன. 

.