This Article is From Jul 31, 2019

ராஜினாமா செய்த 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்!

கர்நாடக சட்டசபையில் 14 அதிருப்தி எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்தும் நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

ராஜினாமா செய்த 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்!

14 அதிருப்தி எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கட்சியில் இருந்தும் நீக்கம்.

New Delhi:

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமான, 14 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சட்டசபையில் இருந்து 14 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்தும் நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 22-ந் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரி காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பில் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

அதை பரிசீலித்த சபாநாயகர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி, சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் கடந்த 25-ந் தேதி தகுதி நீக்கம் செய்து முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி மீதமுள்ள 14 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கர்நாடகத்தில் புதிய அரசு அமைக்க பாஜக முன்வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா 26-ந் தேதி முதல்வராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, 29ஆம் தேதியே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்தார். 

கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 224. இவர்களில் 17 பேர் தகுதிநீக்கம்  செய்யப்பட்டுவிட்டதால், தற்போது சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 207. இதில், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு குறைந்தபட்சம் 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதன்படி, கர்நாடகா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரான ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலாளரிடம் அவர் ஒப்படைத்தார்.
 

.