தமிழக்கத்தில் மக்களவை தேர்தலுக்கு திமுக கூட்டணி அமைத்துவிட்டது. அதிமுக இன்னும் கூட்டணியை இறுதிசெய்யவில்லை. தேமுதிகவால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த டிடிவி தினகரன் அணி தேர்தலில் தனி அணியில் போட்டியிடுகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, எங்கள் கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 38 இடங்களில் அமமுக போட்டியிடும்.
கூட்டணி தொடர்பாக பல கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தின. நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக மோசமாக பேசியவர்களுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி வைத்துள்ளனர். எனவே அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது.
அதிமுகவின் ஒரு அணிதான் அமமுக. என்று குறிப்பிட்டு இருப்பதால் கட்சியின் பெயரை பதிவு செய்யவில்லை. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.