This Article is From Dec 18, 2019

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிச. 23-ல் திமுக தலைமையில் பேரணி! ஸ்டாலின் அறிவிப்பு!!

திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிச. 23-ல் திமுக தலைமையில் பேரணி! ஸ்டாலின் அறிவிப்பு!!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்தது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் டிசம்பர் 23-ம்தேதி திமுக தலைமையில் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது- 

வருகிற 23-ம்தேதி திங்கள்கிழமை  காலை 10 மணிக்கு சென்னையில்,  குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் பிரமாண்ட பேரணி நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறோம். சென்னையில் நடைபெறும் இந்த பேரணிக்கு கட்சிக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது- 

“மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், இந்தியா கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் கூடிக்கொண்டே போகிறது. தொழில்துறையின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது. நாட்டின் உயிரோட்டமான வேளாண்மைக்கு ஊக்கமின்றியும், விளைபொருள்களுக்கு உரிய விலை இன்றியும் ஒளி இழந்திருக்கிறது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே போகிறது. பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மிகக் கடுமையான, முன்னெப்போதும் கண்டிராத அளவிலான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் திணிக்கப்பட்டுள்ள சூழலில்; அனைத்தையும் ஆக்கபூர்வமான சிந்தனையாலும் நடவடிக்கையாலும் சரி செய்ய வேண்டிய பணியைத் தவிர்த்துவிட்டு, நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், ஆர்.எஸ்.எஸ் வகுத்தளித்துள்ள மதரீதியான அடிப்படைவாதக் கொள்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ கடந்த 9-12-2019 அன்று மக்களவையிலும், 11-12-2019 அன்று மாநிலங்களவையிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றி உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

1955ஆம் ஆண்டே இந்தியாவுக்கான குடியுரிமைச் சட்டம் தெளிவாக நிறைவேற்றப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதப் பிரச்சினையுமின்றி நிலவி வந்த அமைதிக்கு, இப்போது குந்தகம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை மக்கள் வாழ்வு மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதை விடுத்து, மத்திய பா.ஜ.க அரசு, பிற்போக்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துகிறது. மதவாத கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அவற்றுள் ஒன்று.

இந்த சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, முத்தலாக் தடைச் சட்டம் - அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, காஷ்மீரில் ஜனநாயக குரல்வளையை நெரித்தல் - தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என தொடர்ச்சியாக, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.

இந்தத் திருத்தச் சட்டத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் சக்திகள் அனைத்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அதனை நிராகரித்து, தங்கள் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. ஏகோபித்த இந்த எதிர்ப்பை பா.ஜ.க. அரசு துளியும் மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் அடுத்த கட்டமாக, ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அகில இந்திய அளவில் மாணவர் சமுதாயம் எதிர்ப்புக்குரலை எழுப்பி வருகிறது. இயல்பாக எழும் மாற்றுக் குரலைச் சகித்துக் கொள்ளும் தன்மையை மத்திய அரசு இழந்துவிட்டது.

டெல்லி ஜாமியா - உத்திர பிரதேச அலிகார் பல்கலைக் கழகங்களில் போராடிய மாணவ - மாணவியர் மீது காவல்துறையினரும், காக்கி சீருடையில் அழைத்து வரப்பட்ட சமூக விரோதக் கும்பலும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறுகிறது. மாணவர்களை ரத்த வெள்ளத்தில் தள்ளி, அதன்பிறகும் கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நாடு முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் மாணவர்களின் அறவழிப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதென்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். கேரளாவில் ஆளுங்கட்சியின் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகப் பங்கேற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், இந்நாட்டில் பாசிச சக்திக்கெதிராக ஜனநாயக சக்திகள் ஓர் அணியில் சேரவேண்டிய தேவையையும் அவசர - அவசியத்தையும் வலியுறுத்தும் முற்போக்கு அடையாளமாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

“எம்மதமும் சம்மதமே”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற உயர்ந்த சிந்தனைகளின் சிறப்புக் கருவூலமான தமிழ்நாட்டில்; வாழ்ந்துவரும் தொப்புள் கொடி உறவுகளான ஒரு லட்சம் ஈழத்தமிழர்களின் உரிமை செறிந்த எதிர்காலத்தையும், நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். பாகிஸ்தான்-பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் இந்த திருத்தச் சட்டம், இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பா.ஜ.க அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும்.

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் பச்சைத் துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது. மாநிலங்களவையில் இந்த சட்டமசோதா நிறைவேறுவதற்கு அ.தி.மு.க.வின் 11 உறுப்பினர்களும், பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான் காரணம் என்கிறபோது, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக அடிமை அ.தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு, இந்த சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அதன்படி வாக்களித்தோம் என மாநிலங்களவை அ.தி.மு.க உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அ.தி.மு.க எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அ.தி.மு.கவும் மனமுவந்து எப்படியெல்லாம், தலையாட்டி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்து, மத நல்லிணக்கம் சிதைந்து, பயமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் இன்னும் பல பகுதிகளிலும், மக்களின் அச்ச உணர்வு, போராட்டமாக மாறியுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்திய பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியா வரவிருந்த வங்கதேச அமைச்சரும் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது அருணாச்சல பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கான பயணங்களை ரத்து செய்திருக்கிறார். பல நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளன. உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும் 1067க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும், இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க அரசு மேற்கொள்ளவிருக்கும் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந்நியப்படுத்திக் கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுமாகும்.

ஏற்கனவே அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நியராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்துள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக்களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர்.

இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் “அமைதி நிலவ வேண்டும்” என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும் - சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அ.தி.மு.க. அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், 23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில் “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடத்திடுவது என அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.” 


இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

.