இத்தனை பற்கள் ஒருவர் வாயில் இருந்ததும் அது வெற்றிகரமாக அகற்றப்பட்டதும் இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் இருக்கும் சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 7 வயது சிறுவன் வாயிலிருந்து 526 பற்களை நீக்கியுள்ளனர் மருத்துவர்கள்.
அந்த சிறுவன் “compound composite ondontome” என்கிற நோயால் அவதிப்பட்டு வந்துள்ளான். இப்படிப்பட்ட சூழலில்தான் வாயிலிருந்து ரத்தம் வழிய வழிய அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளான்.
“அந்த சிறுவனுக்கு 3 வயது இருந்தபோதே வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது. அப்போது சிறிய அளவு ரத்தம் வந்ததால், அவனது பெற்றோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறுவனும் சரியாக ஒழ்ழுழைப்பு கொடுக்கவில்லை. ஆனால், இப்போது அதிக அளவு ரத்தக்கசிவு இருக்கவே, மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளான்.” என்று பல் மருத்துவத் துறை பேராசிரியர் பி.செந்தில்நாதன் கூறினார்.
மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவுடன் சிறுவனுக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதில்தான், கீழ் தாடைக்கு அடியில் நிறைய பற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
“மயக்க மருந்து கொடுத்தவுடன், சிறுவனின் கீழ் தாடை பகுதியை அறுவை சிகிச்சை மூலம் திறந்து பார்த்தோம். உள்ளே ஒரு பை போன்ற அமைப்பு இருந்தது. அதை கவனமாக வெளியில் எடுத்தோம். அதில்தான் சிறியதும் பெரியதுமாக 526 பற்கள் இருந்தன” என்று விளக்குகிறார் செந்தில்நாதன்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. “சிகிச்சை நடந்து 3 நாட்களுக்குப் பிறகு சிறுவன் இயல்பு நிலைக்குத் திரும்பினான்” என்று பல் மருத்துவத் துறைத் தலைவர் பிரதீபா ரமணி தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தனை பற்கள் ஒருவர் வாயில் இருந்ததும் அது வெற்றிகரமாக அகற்றப்பட்டதும் இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)