இன்னும் 3 நாட்களில் காவிரி ஆறு தமிழகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை காரணமாக தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. தண்ணீர் தமிழகத்தை வந்தடைய 3 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்திற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் வறட்சி காணப்படுகிறது. மக்கள் இரு மடங்கு விலை கொடுத்து பயன்படுத்தும் நீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் போதிய தண்ணீர் இல்லை.
இதனால் மக்கள் காவிரி நீரை எதிர்பார்த்துள்ளனர். இதற்கேற்றாற்போல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளை திறக்கும் முடிவுக்கு கர்நாடாகா வந்துள்ளது. இதன்படி கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 350 கன அடி நீரும், கபினியில் இருந்து 500 கன அடி நீரும் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி நீர் தமிழகத்தை இன்னும் 3 தினங்களில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீருக்கு குடகு பகுதிதான் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இங்கு அடுத்துவரும் 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எதிர்பார்ப்பதை விட கூடுதல் மழை பெய்தால் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படலாம்.