ஐ.டி. நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் அவமானம் ஏற்படுத்தி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுசேரியில் கட்டட அனுமதி, மின் இணைப்பு அனுமதி, சுற்றுசூழல் அனுமதி வழங்க அதிமுக அரசு லஞ்சம் பெற்றுள்ளது. அதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.26 கோடி லஞ்சம் தந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கால் உலக அரங்கில் தமிழக அரசுக்கு பெரும் அவமானம் ஆகும்.
காக்னிசன்ட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அதிமுக அரசு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியால் உலக அரங்கில் தமிழர்களுக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து லஞ்சம் தொடர்பான ஆவணங்களை பெற வேண்டும். அந்த ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காக்னிசன்ட் நிறுவனத்திடம் 2012 முதல் 2016-க்குள் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. 2012-ல் இருந்து 2016 வரை அமைச்சர்களாக இருந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.