This Article is From Jul 24, 2019

ஆட்சி அமைக்க தயாராகும் பாஜக! - அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையிலே தங்க வைப்பு!

பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, எடியூரப்பாவையே முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆட்சி அமைக்க தயாராகும் பாஜக! - அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையிலே தங்க வைப்பு!

அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டால், அவர் முதல்வராவது 4வது முறையாகும்.

Bengaluru:


கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று மாலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி தோல்வியடைந்தை தொடர்ந்து, அங்கு ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக தரப்பில் எடியூரப்பாவே அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து கர்நாடகா பாஜக தலைவர் ரவி கூறும்போது, கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பாவையே முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தொடர்ந்து, எடியூரப்பா டெல்லி சென்று கட்சி தலைவர் அமித்ஷாவையும், செயல்தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாங்கள் இன்று கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றக் குழுவின் அறிவுறுத்தல்களுக்காக காத்திருப்போம். அது வந்தவுடன் அடுத்து அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை பெறுவோம், என்று அவர் கூறினார். 

கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். 

மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா கடிதம் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார்.  

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117லிருந்து 101 ஆக குறைந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். பின்னர். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. 

இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனால், முதல்வர் பதவியை இழக்கும் நிலையையும் குமாரசாமி அடைந்தார்


 

.