ஹைலைட்ஸ்
- கடந்த 2014-ம் ஆண்டு ஜம்மூ காஷ்மீரில் தேர்தல் நடந்தது
- பாஜக- மஜக கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன
- மெஹுபூபா முப்டி அம்மாநில முதல்வராக இருந்து வருகிறார்
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக அறவித்துள்ளது.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கட்சிக்கும் நிர்ணயிக்கப்பட்ட பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் முப்டி முகமது சய்யத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி மொத்தம் இருக்கும் 87 தொகுதிகளில் 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, பாஜக 25 இடத்தில் வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக, மஜக உடன் கூட்டணி வைத்தது. இதையொட்டி மஜக, கட்சியின் தலைவர் முப்டி முகமது சய்யத் முதல்வரானார். அவர் இறந்ததை அடுத்து அவரின் மகளான மெஹுபூபா முப்டி முதல்வரானார்.
இந்த அனைத்து சம்பவங்களின் போதும் பாஜக - மஜக கூட்டணி தொடர்ந்தது. ஆனால், சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவி வந்தது. குறிப்பாக, ரம்ஜானை ஒட்டி காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டிருந்தது மத்திய அரசு. மீண்டும் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தி வந்தது மத்திய அரசு. ஆனால், இது மாநில அரசுக்கு உகந்ததாக இருக்கவில்லை.
இதனால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக-வின் பொதுச் செயலாளர் ராம் மாதவ், ‘நாங்கள் மஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளோம். இனியும் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் மஜக கூட்டணியில் தொடர முடியும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதம் தலை தூக்கி வருகிறது. சுஜாத் புகாரியின் கொலை அதற்கு ஒரு சான்று மட்டுமே’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜம்மூ காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.