This Article is From Apr 23, 2019

குஜராத் கலவரம் : குடும்பத்தினர் 14 பேரை இழந்த பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு!

Post-Godhra riots: குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ என்ற பெண்ணுக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் பல்கிஸ் பானோ
  • பல்கிஸ் பானோவுக்கு அரசு வேலை, தங்குமிடம் வழங்க உத்தரவு
  • பலாத்காரத்தின்போது பானோ கர்ப்பிணியாக இருந்தார்
New Delhi:

குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரும், குடும்பத்தினர் 14 பேரை பறிகொடுத்தவருமான பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதில் அகமதாபாத்திற்கு அருகே ரந்திக்பூர் என்ற கிராமத்தில் கடந்த 2002 மார்ச் 3-ம்தேதி வன்முறை ஏற்பட்டது.

இதில் வன்முறையாளர்கள் கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தனர். கலவரத்தின்போது பானோவின் குடும்பத்தினர் 14 பேர் உயிரிழந்தனர். பானோவின் 3 வயது குழந்தை சாலிஹாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, நீதிகேட்ட சட்டப் போராட்டத்தை பானோ தொடர்ந்தார். 

அவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2008-ல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வன்முறைக்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, பானோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 4 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். 

இன்னொரு அதிகாரியான ஐ.பி.எஸ். ஆர்.எஸ். பகோரா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பானோ தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் பதில் அளித்த குஜராத் அரசு, ஓய்வுபெற்ற 4 காவல்துறை அதிகாரிகளுக்கு ஒய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறியது. பில்கிஸ் பானோ தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பானோவுக்கு வீடு இல்லை என்றும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பில்கிஸ் பானோவுக்கு மாநில அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அவருக்கு அரசு வேலையும், தங்கும் இடமும் அமைத்துத் தர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. 

.