This Article is From Aug 31, 2018

‘நாட்டுக்கு எதிராக பேசுவதை தேசவிரோதமாக பார்க்க முடியாது!’- சட்ட கமிஷன் கருத்து

அந்த உரிமைகளை பாதுகாக்க உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா செடிஷன் பிரிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்

‘நாட்டுக்கு எதிராக பேசுவதை தேசவிரோதமாக பார்க்க முடியாது!’- சட்ட கமிஷன் கருத்து
New Delhi:

நாட்டுக்கு எதிராக பேசுவதையோ, அல்லது நாட்டின் சில நடைமுறைகளை எதிர்த்துப் பேசுவதையோ தேசவிரோதமாக பார்க்கபடக் கூடாது என்று சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை சட்டத்துக்குப் புறம்பாகவோ வன்முறையாலோ தூக்கியெறிய முயன்றால்தான் தேசவிரோதமாக பார்க்க முடியும் என்று சட்ட கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது. 

‘செடிஷன்’ என்று சொல்லப்படும் தேசவிரோதச் சட்டம் குறித்து சட்ட கமிஷன் விளக்கமாக கருத்து தெரிவித்துள்ளது. ‘124 ஏ தேசவிரோதச் சட்டம் குறித்து நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தச் சட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் அரசு, 10 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து சட்ட சாசனத்திலிருந்து செடிஷன் பிரிவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதந்திரமாக பேசுவதும் கருத்து கூறுவதும் இந்திய சட்ட சாசனத்தில் இருக்கும் அடிப்படை உரிமைகளாகும். 

அந்த உரிமைகளை பாதுகாக்க உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா செடிஷன் பிரிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாட்டுக்கு எதிராக பேசுவதையோ, அல்லது நாட்டின் சில நடைமுறைகளை எதிர்த்துப் பேசுவதையோ தேசவிரோதமாக பார்க்கபடக் கூடாது. அதே நேரத்தில், அரசை சட்டத்துக்குப் புறம்பாகவோ வன்முறையாலோ தூக்கியெறிய முயன்றால்தான் தேசவிரோதமாக பார்க்க முடியும். 

மாற்றுக் கருத்து என்பது ஜனநாகயத்தின் ஓர் அங்கமாகும். எனவே, சுதந்திரமான கருத்துக்கும் பேச்சுரிமைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் போது, அது குறித்து அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். தேசத்தின் இறையாண்மையைக் காப்பது என்பது கடமையாக இருந்தாலும், அது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருந்துவிடக் கூடாது.’ என்று சட்ட கமிஷன் குறிப்பிட்டுள்ளது.

.