This Article is From Oct 17, 2019

அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்!! சமரசத்தை நோக்கி சன்னி வக்ப் வாரியம்!

அயோத்தி வழக்கை பிரச்னையின்றி சமரசமாக முடித்து வைப்பதற்காக உச்ச நீதிமன்றம் தரப்பில் நடுவர் குழு அமைக்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்!! சமரசத்தை நோக்கி சன்னி வக்ப் வாரியம்!

உச்ச நீதிமன்றத்தில் நடுவர் குழு அளித்த பரிந்துரைகளை சன்னி வக்ப் வாரியம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

New Delhi:

அயோத்தி வழக்கில் திடீர் திருப்பமாக உச்சநீதிமன்றத்தில் நடுவர் குழு அளித்த பரிந்துரைகள் இந்து – முஸ்லிம்களுக்கான வெற்றி என்று சன்னி வக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் ஷாகித் ரிஸ்வி தெரிவித்துள்ளார். அந்த பரிந்துரைகள் இந்து – முஸ்லிம் என இரு தரப்புக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து NDTV – க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

உச்ச நீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழுவிடம் எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் செட்டில்மென்ட் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளனர். அதில் என்ன இருக்கிறது என்பதுபற்றி என்னால் தெரிவிக்க முடியாது. ஆனால் நடுவர் குழு அளித்த பரிந்துரைகள் ஆக்கப்பூர்வமானவை. அவை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். உச்சநீதிமன்றத்தில் கடந்த 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை நேற்றுடன் முடிவு பெற்றது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் நம்பி வருகின்றனர். இந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

மொத்தம் 2.77 ஏக்கர் நிலத்திற்குத்தான் சுமார் 28 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 
 

இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது.

இதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் நடுவர்களாக இருந்து பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். அவர்களிடம் பிரச்சனைக்கு உரிய நபர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்கள்.

இதன்பின்னர் நடுவர் குழு சார்பாக, இவற்றையெல்லாம் செய்தால் பிரச்னையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரலாம் என்பது குறித்து, அறிக்கை ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின்னரும் முடிவு எட்டப்பவில்லை.

இதையடுத்து தினசரி வாக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் விசாரணை முடிவு பெற்றது. அதன்பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடுவர்மன்றத்தின் பரிந்துரைகளை ஏற்பதாக சன்னி வக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

.