This Article is From Sep 19, 2019

Ayodhya Case : அயோத்தி விவகாரத்தில் சட்டத்தை மதியுங்கள்; சர்ச்சை கருத்துகள் வேண்டாம் - மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி - ராமர் கோயில் பிரச்னை தொடர்பான வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனை அக்டோபர் 18-ம்தேதிக்குள் முடிப்பதற்கு முடிவு செய்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை தினசரி விசாரித்து வருகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று பாஜக கூட்டணி மற்றும் இந்துத்துவ அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Nashik:

அயோத்தி விவகாரத்தில் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும் என்றும் சர்ச்சை கருத்துகளை அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி - ராமர் கோயில் பிரச்னை தொடர்பான வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனை அக்டோபர் 18-ம்தேதிக்குள் முடிப்பதற்கு முடிவு செய்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை தினசரி விசாரித்து வருகிறது. 

2.77 ஏக்கர் நிலத்தில்தான் பிரச்னை நீடிக்கிறது. முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டன. 

அவை விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சமரச குழு மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சமரச குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 

இதற்கிடையே, பாஜக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மோடியின் ஆட்சிக் காலத்திற்குள்ளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பேசிய பிரதமர் மோடி, 'அயோத்தி விவகாரத்தில் யாரும் முதிர்ச்சியற்ற தன்மையுடன் பக்குவமில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். வழக்கு இந்தியாவின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் மீதும், சட்டத்தின் நடைமுறைகள் மீதும் தலைவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்'' என்றார். 

.