ஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சரிவில் இருக்கும் ஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்துவதற்காக பழைய வாகனங்களை அளித்து புதிய வாகனங்களை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான ஜிடிபி மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும், அதன் மீதான மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
சுமார் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூலையில் பயணிகள் வாகனத்தின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. விற்பனை குறைந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நிலைமை குறித்து விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன் ஆட்டோ மொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கு கொள்கைகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார்.
மற்றொரு மீட்பு நடவடிக்கையாக வங்கிகளில் கார் லோன் மிக எளிதான முறையில் வழங்க வகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.