This Article is From Aug 24, 2019

அருண் ஜெட்லி விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பினோம்.. எல்.கே.அத்வானி இரங்கல்!

எதையும் கூர்ந்து, ஆய்வு செய்யும் தனது ஆழ்ந்த அறிவுக்காக அறியப்பட்டவர் ஜெட்லி என எல்.கே.அத்வானி தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பினோம்.. எல்.கே.அத்வானி இரங்கல்!

2004ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அத்வானியும், அருண் ஜெட்லியும். (FILE PHOTO)

New Delhi:

அருண் ஜெட்லி விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பினோம் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. 

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், 

எனது மற்றொரு நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லி மறைந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சட்டத்துறையில், பெரிய அளவில் புகழ் பெற்ற, அருண் ஜெட்லி சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்தார். பல ஆண்டுகள், அர்ப்பணிப்புள்ள தொண்டராக பணியாற்றினார். 

நான் கட்சி தலைவராக இருந்த போது தான், பாஜக தலைமை குழுவில் அருண் ஜெட்லி சேர்க்கப்பட்டார். குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர் பொறுப்புக்கு உயர்ந்து சென்றார். எதையும் கூர்ந்து, ஆய்வு செய்யும் தனது ஆழ்ந்த அறிவுக்காக அறியப்பட்டவர் ஜெட்லி. சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாஜவில் உள்ள அனைவரும் அவரை எப்போதும் நம்பியிருந்தார்கள். 

அரசியல் வட்டாரங்கள் முழுவதும் பலவித தரப்பினருடனான நட்பை போற்றி வளர்த்தவர் அவர். உணவுப்பிரியரான அவர் எனக்கு நல்ல உணவகங்களை பரிந்துரைக்க எப்போதும் தவறியது இல்லை. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், அவர் தனது குடும்பத்தினருடன் எனது வீட்டிற்கு வந்து வாழ்த்து கூறிவந்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக, ஜெட்லி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் விரைவில் குணமடைவார் என்றுதான் அனைவரும் நம்பினோம் என்று உருக்கமாக கூறியுள்ளார்.  

அருண் ஜெட்லியின் மறைவு பாஜவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே ஒரு பெரும் இழப்பு என்று அவர் கூறியுள்ளார்.
 

.