ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
ஹைலைட்ஸ்
- 80 லட்சம் இளைஞர்கள் அரசிடம் வேலை கோரி பதிவு செய்துள்ளனர், அன்புமணி
- 2 கோடி இளைஞர்கள் படித்தும் வேலையில்லாமல் உள்ளனர், அன்புமணி
- இன்று சென்னையில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது
இன்று சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு துவக்கி வைத்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டினால், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு மாநிலத்துக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘2 கோடி படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்துள்ளது' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், ‘தமிழகத்தைப் பொறுத்தவரை அதிக அளவிலான முதலீடு தென் மாவட்டங்களில் இருக்க வேண்டும். அரசு தென் மாவட்டங்களில் சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி வேலை வாய்ப்பைப் பெருக்க வேண்டும்.
மாநில அளவில், 80 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இந்த அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது. 2 கோடி இளைஞர்கள் படித்து முடித்த பின்னரும் வேலை இல்லாமல் சிரம்பபட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த அரசு திட்டம் வகுக்கவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்' என்று கேட்டுள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - "வெயிட்டர் வேலைக்கு பட்டதாரிகள் உட்பட 7000 பேர் விண்ணப்பம்!"