This Article is From Nov 13, 2019

''சிவசேனா முன் வைக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை'' - அமித் ஷா கடும் தாக்கு!!

மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்பு, 50:50 அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்று பாஜக உறுதி அளித்ததாகவும், இதனை அக்கட்சி நிறைவேற்றவில்லை என்று கூறி பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டுள்ளது.

எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முன்வராத நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

Mumbai:

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதற்கு சிவசேனா முன் வைக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அதிரடியாக கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், முதன் முறையாக அமித் ஷா இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது-

தேர்தலுக்கு முன்பாக நானும், பிரதமர் மோடியும் பிரசாரம் மேற்கொண்டோம். மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்றார் தேவேந்திர பட்னாவீஸ் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்பார் என்று கூறினோம். அப்போதெல்லாம் எங்களது பிரசாரத்திற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது புதிய கோரிக்கைகளுடன் அவர்கள் பிரச்னையை கிளப்பியுள்ளனர். சிவசேனா முன் வைக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை. 

இவ்வாறு அமித் ஷா கூறினார். இதற்கிடையே ஆட்சியமைப்பதில் சிவசேனா மும்முரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சிவசேனா - காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


மகாராஷ்டிர அரசியலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ள சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஓகே சொல்லி விட்டதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் ஆதரவு கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது.

எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன் வராத நிலையில், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவருமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷியாரி பரிந்துரை செய்தார். 

இதையடுத்து மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே காங்கிரசின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தீவிரம் காட்டி வருகிறார்.


இந்த நிலையில் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்ர தலைவர்களான முன்னாள் முதல்வர் அசோக் சவான், மாணிக்க ராவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே ,'எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. விரைவில் நல்ல செய்தியை சரியான நேரத்தில் அறிவிப்போம்' என்றார். 

.