This Article is From Jan 12, 2019

அகிலேஷும் மாயாவதியும் உ.பி-யில் தலா 38 தொகுதிகளில் போட்டி… காங்கிரஸுக்கு டாட்டா!

உத்தர பிரதேசத்தின் இரண்டு பிரதான கட்சிகள் இப்படி அறிவித்துள்ளது, வரும் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அகிலேஷும் மாயாவதியும் உ.பி-யில் தலா 38 தொகுதிகளில் போட்டி… காங்கிரஸுக்கு டாட்டா!

25 ஆண்டுகளுக்கு முன்னர் அகிலேஷும் மாயாவதியும் கூட்டணி அமைத்து உத்தர பிரதேச்சித்தில் ஆட்சி அமைத்தனர்.

Lucknow:

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் இரண்டு பிரதான கட்சிகள் இப்படி அறிவித்துள்ளது, வரும் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-வுக்கு எதிராக முதன்முறையாக களத்தில் இறங்கியுள்ள கூட்டணியும் இதுவே. 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாயாவதி, “இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தூக்கத்தை களவாடும்” என்று சொல்ல இரு தலைவர்களும் கேமராக்களைப் பார்த்து சிரித்தனர். 

25 ஆண்டுகளுக்கு முன்னர் அகிலேஷும் மாயாவதியும் கூட்டணி அமைத்து உத்தர பிரதேச்சித்தில் ஆட்சி அமைத்தனர். ஆனால், இருவருக்கும் இடையிலான கூட்டணி சீக்கிரமே முறிந்தது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு மாநிலத்தில் நடந்த 3 இடைத் தேர்தலில் மீண்டும் சேர்ந்து நின்றனர். அதில் பாஜக-வை 3 தொகுதியிலும் அவர்கள் கூட்டணி தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. 

அதை மெய்பிக்கும் வகையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் தற்போதைக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி போட்டியிடாது என்று தெரிகிறது. 

கூட்டணி குறித்து அகிலேஷ் பேசுகையில், "கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கு மாயாவதிஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக-வை உத்தர பிரதேசத்திலிருந்து விரட்டியடிக்கவே நாங்கள் கை கோர்த்துள்ளோம். உத்தர பிரதேசத்தை சாதிய ரீதியாக மாற்றி வைத்திருக்கிறது பாஜக. வெறுப்பு அரசியலைப் பரப்பும் பாஜக-வை நாங்கள் துடைத்தெறிவோம்" என்று கருத்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸை ஏன் கூட்டணியில் சேர்க்கவில்லை என்பது குறித்து மாயாவதி, "சமீபத்தில் உ.பி-யில் நடந்த இடைத் தேர்தலில் கூட காங்கிரஸ் டெபாசிட் இழந்துவிட்டது. மத்தியில் பல முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் ஊழலும் வறுமையும் அதிகமாக இருக்கிறது. பாஜக-வும் காங்கிரஸும் பல வகைகளில் ஒன்றாகத்தான் செயல்படுகின்றன" என்று குற்றம் சாட்டினார்.
 

.