This Article is From Nov 18, 2018

தாயகம் திரும்ப இருந்த இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை..!

தெலங்கானாவைச் சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அமெரிக்காவில் தனது அபார்ட்மென்டுக்கு வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுனில், 16 வயது சிறுவனால் வென்ட்னார் நகரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்காவில் இருக்கும் அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்

New Delhi:

தெலங்கானாவைச் சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அமெரிக்காவில் தனது அபார்ட்மென்டுக்கு வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுனில் எட்லா என்கின்ற அந்த நபர், தனது தாயின் 95வது பிறந்த நாளைக் கொண்டாடவும், குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவும், கொல்லப்படுவதற்கு அடுத்த நாள் புறப்பட இருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எங்கள் குடும்பத்தில் பலர் அவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தோம். அவர் சீக்கிரமே இந்தியாவுக்கு வர இருந்தார்' என்று விவரிக்கிறார் சுனிலின் உறவினர் ராஜ் கேசுலா.

சுனில், 16 வயது சிறுவனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்காவில் இருக்கும் அவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

நவம்பர் 15 ஆம் தேதி, சுனில் அவரது அபார்ட்மென்டுக்கு வெளியே குண்டடிகளுடன் கிடந்துள்ளார். சுனில் குறித்து தகவல் அறிந்த போலீஸ், சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. ஆனால், காவலர்கள் வரும் முன்னரே சுனில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கு தொடரப்பட்டு போலீஸ் விசாரித்தது. அப்போது 16 வயது சிறுவன் ஒருவன், சுனிலின் காரை உடைத்து அவரிடமிருந்து திருட முற்பட்டது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவனை போலீஸ் கைது செய்து சிறார் டிடென்ஷன் மையத்துக்கு அனுப்பியுள்ளது.

‘என்னால் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவரிடமிருந்த காரை மட்டும் எடுத்துச் சென்றிருக்கலாமே?' என்று சுனிலின் மகன் மாரிசன் வருத்ததுடன் கேள்வி எழுப்புகிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக சுனில் எட்லா, அட்லான்டிக் சிட்டியில் தான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.