This Article is From Jul 04, 2019

பொள்ளாச்சியை போல் கர்நாடகாவிலும் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடூரம்!

கடந்த மார்ச் மாதம் அந்த இளைஞர்கள் மாணவியை தங்கள் காரில் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் வழங்கி அவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியை போல் கர்நாடகாவிலும் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடூரம்!

The police also warned people against sharing the video. (Representational)

Bengaluru:

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் சக கல்லூரி மாணவியிடம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக தெரியவந்தது

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இதேபோன்று ஒரு கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் கர்நாடகாவிலும் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியான பின்னரே காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 19 வயது கல்லூரி மாணவியை காரில், 5 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. தொடர்ந்து, அந்த வீடியோ, காவல்துறையின் சமூக ஊடக கண்காணிப்பு பிரிவின் பார்வைக்கு வந்தது. இதையடுத்து, சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேட தொடங்கியது.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 5வது நபரே இந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் சக கல்லூரி மாணவியான அந்த பெண்ணை தங்கள் காரில் வனப்பகுதிக்கு அழைத்து சென்ற 4 மாணவர்கள் அங்கு அவருக்கு போதைப்பொருளை வழங்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த மாணவர்கள், நடந்த விவகாரம் குறித்து வெளியில் யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று அந்த மாணவியை மிரட்டி வந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நட்பாக பேசி பழகி அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, பழங்குடியினரைப் பாதுகாக்கும் கடுமையான சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

.