
2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் நாடு முழுவதும் பலன் பெறுவார்கள்.
நாட்டில் தேன் உற்பத்தி மற்றும் தேன் உற்பத்தியாளர்கள் நலனுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் குறித்து 3-வது நாளாக நிதியமைச்சர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது -
தேன் உற்பத்தி வகைக்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்படும். இதனால் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் நாடு முழுவதும் பலன் பெறுவார்கள்.
கிராமப்புறங்களில் வாழ்வாதார தொழிலாள தேன் உற்பத்தி இருந்து வருகிறது. தேன் வளர்ப்புத் தொழில் ஒருங்கிணைப்பு, மேம்பாடு, தேன் சேகரிப்பு, விளம்பரப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், பெண்களை ஈடுபடுத்துதல், தேனீக்கள் வளர்ப்பு உள்ளிட்டவைகளுக்காக இந்த 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் விவசாயிகள் பலன் அடைவார்கள்.
விளை பொருளை வினியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை பயிருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்போது காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்பட உள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.