
எரிபொருள் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 11 நாட்களில் பெட்ரோல் ரூ.6.02, டீசல் 6.49 உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சுமையாக எரிபொருளின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படாமல் நீடித்து வந்த எரிபொருளின் விலை, 11 நாட்களுக்கு முன்பாக உயர்த்தப்பட்டது.
அன்றிலிருந்து நாள்தோறும் பைசாக்கணக்கில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுக் கொண்டே வந்தது. முன்பு மாதம் 2 முறை பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வந்தன.
நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை இன்றைய நிலவரம்-
நகரம் | பெட்ரோல் | டீசல் |
---|---|---|
டெல்லி | 77.28 | 75.79 |
கொல்கத்தா | 79.08 | 71.38 |
மும்பை | 84.15 | 74.32 |
சென்னை | 80.86 | 73.69 |
(Source: Indian Oil) |
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ. 6.02-ம், டீசல் விலை ரூ. 6.49-ம் ஒரு லிட்டருக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் டீசல் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாட்டில் மொத்தம் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில், இந்த 3 எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் 90 சதவீத பெட்ரோல் பங்க்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.