கொரோனா பாதிப்பு, ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் இந்தியாவின் ஜிடிபி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவீதமாக சரிந்துள்ளது. இப்படியே சென்றால் ஒரு சில மாதங்களில் மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2020-21 ஆண்டின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ஜிடிபி 23.9% சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.3% ஜிடிபி உயர்ந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டின் மொத்த ஜிடிபி 4.2 சதவீதம் உயர்ந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்குக் காரணமாக ஜிடிபி சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நமது நாடு அதிகாரப்பூர்வமாக பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கு முன்பு ஜி20 நாடுகளில் பிரிட்டன் தான் 21.7 சதவீதம் சரிவடைந்தது. ஆனால், பிரிட்டனைக் காட்டிலும் இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவீதமாக உள்ளது. ஜி20 நாடுகளில் தற்போது இந்தியா தான் ஜிடிபி வீழ்ச்சியடைந்து மோசமான பொருளாதார நிலையில் உள்ளது.
இதுகுறித்து புள்ளியில் நிபுணர் ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, பொருளாதார நிலை சீர்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிறுகுறு தொழில்நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 3.54 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 63,498 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக அதிக பாதிப்புகள் உள்ளது.
முன்னதாக பொருளாதரத்தை மீட்டெடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் கடந்த மார்ச் மாதம் 1.15 சதவீதம் குறைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவின் ஜிடிபி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது