
எதிர்பாராத அளவுக்கு பொது முடக்க காலத்தில் பார்லே ஜியின் விற்பனை இருந்ததாக அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்க காலத்தில், ரூ. 5 மதிப்புள்ள பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டுகள் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனையாகியுள்ளது.
பொது முடக்கம் காரணமாக பலருக்கும் வேலையில்லாத நிலை, பிஸ்கெட் பாக்கெட்டின் குறைந்த விலை உள்ளிட்டவை காரணமாக பார்லே ஜியின் விற்பனை அதிகரித்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பார்லே ஜி, இந்த லாக்டவுண் காலத்தில் விற்பனை அடைந்திருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் எத்தனை ரூபாய்க்கு விற்பனை என்ற விவரத்தை பார்லே ஜி நிர்வாகம் வெளியிடவில்லை.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகி மாயங்க் ஷா கூறுகையில், 'நிறுவனத்திற்கு பிஸ்கெட் துறையை பொருத்தளவில் 5 சதவீதம் அளவுக்கு பங்குகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இதில் பார்லே ஜியின் விற்பனை பங்கு மட்டும் 80 முதல் 90 சதவீதம் வரை இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத அளவுக்கு பொது முடக்க காலத்தில் பார்லே ஜியின் விற்பனை இருந்ததாக அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பார்லே ஜி நிறுவனம் கடந்த 1929-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். தற்போது அதற்கு சொந்தமாக 10 நிறுவனங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் சுமார் 1 லட்சம்பேர் பார்லே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் 125 தொழிற்சாலைகள் பார்லேவுக்காக செயல்படுகின்றன.
பார்லே நிறுவனத்திலிருந்து க்ரேக்ஜேக், மொனாக்கோ, ஹைட் அண்டு சீக் போன்ற மற்ற பிஸ்கெட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.